கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவும் - சஜித்
(CBC TAMIL - COLOMBO) - கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடி நிலை காணப்படுவதனால் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கவும், நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"கொரோனா வைரஸ் தொடர்பாக மட்டுமே பேச நாங்கள் தயாராக இருக்கிறோம், அரசியல் அல்ல. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்பு கொரோனா வைரஸின் விளைவுகளைப் பற்றி அரசாங்கம் சிந்தித்திருக்க வேண்டும். நான் பெப்ரவரி 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தைமுன்னிலைப்படுத்தியபோது கவனத்திற் கொண்டிருந்திருக்கலாம்" என கூறினார்.
