ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரிகளுடன் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்குத் தொடர்புண்டு...! சட்டத்தரணி ஒருவரும் கைது - பொலிஸ்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இன்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர்ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று இரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாத் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகளுடன் நேரத் தொடர்புகள் உள்ளன என தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இடம்பெற்ற நடவடிக்கையில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.